Tuesday, 26 February 2013

66 A என்ன என்று வினா எழுப்பியவர்களுக்கு







தினமலர் 26/02/2013 செய்தி.  இதை முழுவதும் படியுங்கள். கலர் பகுதி 66 A என்பதை விளக்கும்.

திருவனந்தபுரம்: ராஜ்யசபா துணை தலைவர் குரியனுக்கு, வக்காலத்து வாங்கிய கேரள மாநில மகளிர் காங்., தலைவர் பிந்து கிருஷ்ணாவை, சமூக வலை தளத்தில் விமர்சித்த, 140 பேர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், கேரள போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி, 1996ல், ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், தற்போதைய ராஜ்யசபா துணை தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, குரியன் சிக்கினார். ஆனாலும், சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், இவர் விடுவிக்கப்பட்டார். குரியனை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக, பாதிக்கப்பட்ட பெண் கூறியதை அடுத்து, இந்த விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. "குரியன், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், கேரள மாநில மகளிர் காங்., தலைவர் பிந்து கிருஷ்ணா, இந்த விவகாரத்தில், குரியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, சமூக வலைதளமான, "பேஸ்புக்'கில், அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. உடன் பிந்து கிருஷ்ணா, கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான உம்மன் சாண்டியை சந்தித்து, புகார் மனு அளித்தார். இதுகுறித்து, விசாரணை நடத்திய கேரள மாநில சைபர் கிரைம் போலீசார், "பேஸ்புக்'கில் பிந்து கிருஷ்ணாவை விமர்சித்த, 140 பேருக்கு எதிராக, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை, இவர்களை கைது செய்யவில்லை என்றாலும், அடுத்த கட்ட விசாரணை விரைவில் துவங்கும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பிந்து கிருஷ்ணா கூறியதாவது: குரியன் விவகாரத்தில், காங்., கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதைத் தான் நான் தெரிவித்தேன். அதற்காக, சமூக வலைதளத்தில் நாகரிகமற்ற, தரக் குறைவான வார்த்தைகளில் என்னை விமர்சித்துள்ளனர். என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், என் பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்களை, சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். விமர்சித்தவர்களில் பலர், போலியான அடையாளத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக, சைபர் கிரைம் போலீசார், தகவல் தொழில்நுட்ப துறையின் உதவியை நாடியுள்ளனர். இவ்வாறு, பிந்து கிருஷ்ணா கூறினார்.

இதற்கிடையே, சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, 17 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு, கேரள ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது. அதே நேரத்தில், குரியனுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மகிளா சங்கத்தின் பொது செயலர் கமலா என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், "குரியனுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை விசாரிக்கும்படி, கேரள மாநில அர”க்கும், போலீஸ் டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment