'அயல்நாடுகளில் குறிப்பாக, அரபு நாடுகளில், சமஸ்கிருதத்தின் பெருமையைப் புரிந்து, அதற்கு முஸ்லிம்கள் செய்த சேவை, பாராட்டத்தக்கது.
ஆனால், இந்தத் தொடர்பு இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நின்றதோடு அற்று விட்டது...' என்றார் குப்பண்ணா.
'முஸ்லிமும், சமஸ்கிருதமுமா... அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் சம்பந்தப்படுத்துகிறீரே...' என்றேன்.
'இல்ல இல்ல... நான் சொல்றது உண்மை தான். அந்த சரித்திரம், ரொம்பப் பேருக்குத் தெரியாது. சமஸ்கிருத இலக்கியத்தில், 'இதோபதேசம்' (பஞ்ச தந்திர கதைகள்) என்னும் பெயர் பெற்ற நூலை, 'குலைலா திம்னா' என்ற பெயரில் அரபு மொழியில், அப்துல்லா மாக்பா என்பவர் மொழி பெயர்த்தார். இவர் பாக்தாத் காலிபின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர். இதே நூலை, கி.பி.1400ல், அபுல் மவுல்வி என்பவர் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
'கஜினி முகமதுவைப் பற்றி சமஸ்கிருதத்தில் காலிங்க அரசன் புகழ்ந்து எழுதிய, செய்யுள் நூலை, முதலில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ஆனால், கஜினி முகமது, அடுத்த முறை போரிட வந்த போது, இந்த அரசனின் கோட்டையை முற்றுகையிட்டான். ஓடி ஒளிந்து கொண்டான் அரசன். ஆனால், அவன் எழுதிய காவியத்தை படித்து ரசித்தான், கஜினி முகமது. அதனால், அந்த அரசனுக்கே கோட்டையை விட்டுக் கொடுத்து சென்றான்.
'புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரும், ஜோதிடருமான அல்பர்னியா, சமஸ்கிருதம் பயில்வதற்காக, முல்தானில், 16 ஆண்டுகள் தங்கினார். அந்தக் காலத்தில் முல்தான், சமஸ்கிருத வித்யாகேந்திரமாக இருந்தது.
'அலாவுதீன் கில்ஜி காலத்தில், அஸ்ஸாமை சேர்ந்த முஸ்லிம் ஸுபிகளில் ஒருவர், கவுமாரர் எழுதிய, 'அமரகுண்டம்' என்ற, சமஸ்கிருத நூலை, பாரசீக பாஷையில் மொழி பெயர்த்தார். அதன் கையெழுத்து பிரதியான, 'பஹ்ருல் ஹயாத்' அமதாபாத்தில் உள்ள ஹஸ்ரத்பீர் முகமது ஷாவின் புத்தக சாலையில் இருக்கிறது.
'முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில், 'கோகசேதி' என்னும் வடமொழி நூலை, 'டூட்டி நாமா' என்னும் பெயரில், மொழி பெயர்த்தனர்.
'அக்பரின் காலத்தில், 'சதாலங்கார சிம்ஹாசனபதிசீ' என்னும் பிரபல வடமொழி நூலின் மொழி பெயர்ப்பு வேலை நடந்தது. அக்பருடைய தர்பாரில் இருந்த, க்வாஜா ஸுசேன் என்பவர், இவற்றைக் காவிய வடிவில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால், வேலை முடிவதற்குள் அவர் இறந்து விட்டார். முல்லா அப்துல் காதர் பதினி, மீதிப் பகுதியை வசன ரூபத்தில் இயற்றி முடித்தார்.
'அதர்வண வேதத்தை, பாரசீகத்தில் மொழி பெயர்த்தார் ஷேக் பதன் என்பவர். இவர் பிறப்பால் பிராமணராக இருந்து, பிறகு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர். பிரசித்தி பெற்ற, 'லீலாவதி' என்ற கணித நூலை, பாரசீக மொழிக்கு மாற்றினார், அப்துல் பைஜீ.
'நசாப்கான், மவுலானா அப்துல் காதர் பதினி, ஷேக் சுல்தான், தானேசரி ஆகிய நான்கு புலவர்கள் மேற்பார்வையில், ராமாயணத்தை, பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.
'இன்னும் சமஸ்கிருதம் கற்ற முகமதிய பண்டிதர்கள் பலர், இரு மொழிகளிலும் உழைத்து, சேவை செய்திருக்கின்றனர். உபநிஷத்தையும், பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்...' என்று கூறி முடித்தார் குப்பண்ணா.
28/08/2016 varamalar.
No comments:
Post a Comment