Sunday, 17 September 2017

வீரபாண்டிய கட்டபொம்மன் கிஸ்தி கட்டவில்லை என்பது உலக மகா பொய்


.
இது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி யின் கற்பனை கதையே.

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது.

குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப் படாமல் என்னிடம் நீட்டி, 'அம்பி... இதப் படிச்சுப் பாருடா...' என்றார்.

அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

ஜே.ராஜா முகம்மது எழுதிய, 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.

அதில், மே 31, 1798 வரை, கப்பத் தொகை, 16,550 ரூபாய் பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படி, கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேய படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்து, பேசுமாறு பணித்தது.
இதன்படி, தன்னை, ஆக.,18, 1798ல் ராமநாதபுரத்தில் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்ட பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாட்கள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன், 11,000 ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின், கட்டபொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்...

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து, அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்யவும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம் மற்றும் ஜான் காசாமேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில், (டிச.,15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம், ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது. விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில், லூசிங்டன் என்பவர், கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

03/04/2016 varamalar.

No comments:

Post a Comment