கண்ண பரமாத்மா கீதையின் பன்னிரெண்டு அத்தியாயங்களில் அர்ஜுனனுக்கு வந்த பலப் பல சந்தேகங்களுக்கு விடையளித்து வந்தார். பதிமூன்றாவது அத்தியாயத்தில் ஞானத்தை விஞ்ஞானமாகப் புரிந்து கொள்ளும் படி எடுத்துரைக்கிறார். ஒரு ஜீவனுள் இருக்கும் ஆத்மாவிற்கும், எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவிற்கும் உள்ள வித்தியாசத்தைத் துல்லியமாக விவரித்து உணர்த்துகிறார். உபநிஷத் மகா வாக்கியமான தத்வமஸி யில் உள்ள அசியின் விளக்கம் பதிமூன்றாவது அத்தியாத்தில் தொடங்குகிறது. தத் தவம் இவை பற்றி முதல் பன்னிரெண்டு அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் கண்ணன்.
பதினோராவது அத்தியாயத்தில் பரமாத்வாவின் விராட ரூபத்தை அர்ஜுனனின் விழிகள் மூலம் தரிசித்தோம். விஸ்வரூப தரிசனம் நினைத்த இன்பத்தைத் தரவில்லை. மனதில் நிறைய கிளர்ச்சியையும் கேள்விகளையும் சந்தேகங்களையுமே எழுப்பியது. அதற்கு பன்னிரெண்டாவது பதிமூன்றாவது அத்தியாயங்களில் விளக்கம் தருகிறார். பக்தி யோகத்தின் மகத்த்துவத்தை ஆறாம் அத்தியாத்திலேயே உணர்த்தி இருந்தாலும் அதனை விக்ஞானப் பூர்வமாக இந்த அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார். பக்தியினாலே இறைவனை முழுமையாக உணரமுடியும், பின் அடையவும் முடியும். மேலும் அது தான் மிக எளிய மார்க்கமாகும். எப்பொழுதும் அவன் நினைவில் இருந்து அவனுக்கே நம் காரியங்களை அர்ப்பணம் செய்தால் அதுவே நம்மை இன்னொரு பிறவி இல்லா நிலைக்கு அழைத்துச் செல்லும். இறைவன் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கைக்கு இன்னொரு பெயர் பக்தி!
பக்தியில் ஒரு பிரிவு தியானம். அதற்கு சிறிது கடின முயற்சி தேவை. தியாகமே தியானத்திற்கு அடித்தளம். இறைவன் மேல் கண்மூடித்தனமான அன்பிருந்தால் அதுவே பக்தி. நடைமுறைப்படுத்துவது எளிது. பக்தி உண்மையிலேயே நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசம். இந்தப் பாதையைத் தொடரும் பொழுது நம்மால் எங்கும் எல்லாவற்றிலும் இறைவனின் ஊடுருவியிறுக்கும் சக்தியைக் காணலாம். ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவனால் கூட இறைவன் எங்கும் எதிலும் வியாபித்து இருக்கும் உண்மையை உணர்வது கடினம்.
இந்த அத்தியாயத்தின் சாராம்சமாகக் கருதுவது என்னவென்றால் பக்தி என்பது வேண்டுதல் இல்லாமல் பகவானை நினைக்கும் நிலை. இந்த உயிர் இந்த உலகத்தில் வாழ்வதற்கு பல தேவைகள் இருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சிக்கும் பல தேவைகள் இருக்கின்றன. யார் ஒருவன் இறைவன் விருப்பத்தையே தன் விருப்பமாகக் கொண்டு எந்த தேவைக்கும் அவனை அணுகாமல் சுயமாக வாழ்ந்து அதே சமயம் அனைத்து செயல்களையும் அவனுக்கு அர்ப்பணம் செய்கிறானோ, எவனுடைய மனம் எந்த வேலையில் ஈடுப்பட்டாலும் கண்ணனே இலக்கு என்று செயல் படுகிறானோ அவனுக்கு வேறு ஒரு பிறப்பு கிடையாது என்று பரந்தாமன் இந்த அத்தியாயத்தில் உறுதியளிக்கிறார்.
மனதை தியானத்தில் செலுத்த முடியவில்லை என்றால் பயிற்சியின் மூலம் முதலில் புத்தியை அவர் மேல் ஒரு நிலைப் படுத்தி மனதில் அன்போடு அவரை ஸ்மரணிக்கும் பொழுது அவருடனே லயமாகிவிடுவோம் என்று வாக்களிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. இல்லை இது கடினமாகத் தோன்றினால் கர்ம யோகத்தின் மூலம் அவரைச் சென்று அடைய முடியும் என்கிறார். அதுவும் சிரமமாக இருந்தால் நம் செயல்களின் பலன்களை அவருக்கு அர்ப்பணித்து விடு என்கிறார். இதைவிட எளிமையான வழி என்ன இருக்கமுடியும்?
பயிற்சியை விட சிறந்தது ஞானம். அதை விட சிறந்தது தியானம். அதைவிட சிறந்தது நம் செயல்களின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது. அந்த நிலையில் நாம் அமைதியை பூரணமாக அனுபவிக்கிறோம். நான் யார் என்ற ஆத்ம தத்துவத்தை உணர பல நற் குணங்கள் தேவையாக உள்ளன. கருணை, அஹங்காரம் இன்மை, பணிவு, உண்மை, அசூயை இன்மை, பொறுமை, அடக்கம், பேராசை அற்ற மனம் என்று வரிசையாக பல குணங்கள் தேவை.
அதில் முக்கியமாக அஹிம்சை தேவை. அஹிம்சை என்பது மனதாலும் பிறருக்கு துன்பமோ மனக் கசப்போ ஏற்படாமல் தவிர்ப்பது. பிற உயிர்களுக்கு எந்த விதத்திலும் தொல்லை கொடுக்காமல் இருப்பது. அப்படி இருப்பவன் மற்றவர் தனக்குக் கொடுக்கும் இடரையும் பொருட்படுத்தாமல் இருப்பான். இந்த குணம் இருப்பவனை இறைவனே அரவணைத்து ஏற்றுக் கொள்கிறார்
இரட்டை நிலைகளான சுகம் – துக்கம், இன்பம் – துன்பம், மகிழ்ச்சி – சோகம், விருப்பு – வெறுப்பு, இவற்றிலிருந்து விடுபட்டு அனைத்தையும் ஒரே மாதிரி பாவிப்பவன் இறைவனுக்கு நெருக்கமாகிறான்.
கிருஷ்ண பிரேமை அல்லது கிருஷ்ண பக்தி அதுவே வழியாகவும் இலக்காகவும் அமைந்துள்ளது. பக்தியே நம்பிக்கை. நம்பிக்கையே உண்மை. உண்மையே இறைவன். இந்த பாதை ஜீவாத்மாவை பரமாத்மாவை புரிந்து கொள்ள உதவுகிறது. அதன் பின் அடையவும் உதவுகிறது. இதுவே பதிமூன்றாம் அத்தியாயத்தின் சாரம்.
No comments:
Post a Comment